காதலித்தோம்.......



1.
என்னருகிலிருந்து
நாட்களை நிமிடங்களாக்கிக்
கொண்டிருக்கும்
காலதேவன் நீ!

2.
கன்னத்தில் ஒட்டியிருந்த
தூசியை எடுக்க எனது
கைவிரல்கள் பட்டதும்
கண்டு கொள்ளாதவள் போல் நீயும்
கவனிக்காதவன் போல் நானும்
இருந்தாலும் இருவரின்
இதயத் துடிப்புகளும்
இரண்டு மடங்கானது உண்மை.

3.
எப்பொழுதுமே
என்னை அடித்துவிட்டு
நீதான் சினுங்குகிறாய்.

4.
உனக்காகவும் சேர்த்து
நானே காதலித்த
என் காதல்
பாதியாகி விடுமோ
எனத் தயங்குகிறேன்
நீயும் காதலிக்க ஆரம்பித்துவிட்டாயே!

5.
காலச் சுருக்கங்களின்
கலக்கங்களாகவே போகிறது
காதலியே நீ
கைகுலுக்கிப் பிரியும் பொழுது.

6.
உச்சி வெயில்
சுடவில்லையா என்கிறாய்,
நிலவின் மடியிலல்லவா இருக்கிறேன்!

7.
குளத்திலும் கல்லெறிந்து
விளையாடுகிறாய்
என் மனதில் காதலெறிந்தது போல.

8.
எவ்வளவோ
பேசியிருந்தாலும்
இரு கண்களும்
ஒரே நேரத்தில் சந்திக்கும்பொழுது
மவுனம் மட்டுமே நிலவுகிறது.

9.
நான் உன்னைத் தூக்க
வேண்டும் என்பதற்காகவே
எட்டாத உயரத்திலிருக்கும்
பூவைப் பறிக்கத் துடிக்கிறாய்.

10.
காதலிக்கிறேன் என்பதை என்
காதுக்குள் மட்டுமே சொல்லு,
இல்லையென்றால்
காற்றும், இந்தக் கடலும்
உன்னுடனேயே வந்துவிடப் போகிறது.

11.
காதல் படம்
பார்க்கலாமென்கிறாய்,
பேய்ப் படம்
பார்க்கலாமென்கிறேன்.
அப்பொழுதுதானே என்னை
அள்ளி அனைத்துக் கொள்ளுவாய்.

12.
ஏனோ தெரியவில்லை
என்னுடன் இருக்கும்போது மட்டும்
இடி, மின்னலுக்குப் பயப்படுகிறாய்!

13.
எத்தனையோ இரவில்
குச்சியை வைத்து
உன் வீட்டு வாசலில்
தட்டிச்சென்று இருக்கிறேன்
கூர்கா போல.

14.
உன் மடியில்
படுத்துக்கொண்டே
நட்சத்திரங்கள் எண்ண வேண்டும்
எண்ணி முடிக்கும் வரை
உன் மடியிலேயே இருக்க வேண்டும்.

15.
இன்று பௌர்ணமி
என்கிறாய்.
என்னருகில் நீ இருக்கும்
பகல் கூட எனக்கு அப்படித்தானே!...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment